தருமபுரி: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்பது காலதாமதமான முடிவல்ல என்று மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அக் கட்சியின் அமைப்பு தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்கிற முடிவு தாமதமாக எடுக்கவில்லை.
இந்த உயர் சிறப்பு தகுதியில், மாணவர்களுடைய கல்வி உரிமையை பாதிக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடி பெற்று தந்த 69 சதவீத இட ஒதுக்கீடு பறிபோகும். வெளிநாட்டு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தக் கூடும். கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இவை யாவும், தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்த உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்று அறிவித்தோம்.
இதுதொடர்பாக ஏற்கனவே 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை தமிழக முதல்வர் அமைத்தார். இந்தக்குழு ஆராய்ந்து, ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது இப் பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்கிற முடிவு எடுக்கப்பட்டது. ஆகவே, இதில் எந்தவித காலதாமதமும் இல்லை.
இது கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. அதிமுக அரசைப் பொருத்தவரை மாணவர்களுடைய கல்வி உரிமை, அவர்களின் நலன் மட்டுமே முக்கியம். மாணவர்கள் உயர்கல்வி உரிமையை பாதிக்கின்ற எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு மேற்கொள்ளாது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அவருடைய பணிக்காலத்தில் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். துணைவேந்தர் விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.
ஏற்கனவே போராடிப் பெற்ற 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பறிபோகும் வகையிலும் மற்றும் மாணவர்களின் உரிமையை பாதிக்கின்ற வகையில் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.