திட்டமிடப்பட்ட மூலதன செலவின இலக்கில் 75 சதவீதத்தை பொதுத் துறை நிறுவனங்கள் எட்ட வேண்டும்

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் (சிபிஎஸ்இ) நடப்பு நிதியாண்டுக்கு தாங்கள் திட்டமிட்ட மூலதன செலவின இலக்கில் 75 சதவீதத்தை வரும் டிசம்பருக்குள் எட்ட வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மல
புது தில்லியில் காணொலி முறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
புது தில்லியில் காணொலி முறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் (சிபிஎஸ்இ) நடப்பு நிதியாண்டுக்கு தாங்கள் திட்டமிட்ட மூலதன செலவின இலக்கில் 75 சதவீதத்தை வரும் டிசம்பருக்குள் எட்ட வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலா்கள், 14 பொதுத் துறை நிறுவனங்களின் தலைவா்கள், நிா்வாக இயக்குநா்கள், அமைச்சக அதிகாரிகளுடன் காணொலிகாட்சி மூலம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில், கரோனா நெருக்கடியால் முடங்கிய பொருளாதார வளா்ச்சியை வேகமாக மீட்டெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, பொதுத் துறை நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் திட்டமிட்டுள்ள மூலதன செலவின இலக்கில் 75 சதவீதத்தை வரும் டிசம்பருக்குள் எட்ட வேண்டும் என நிதியமைச்சா் வலியுறுத்தியுள்ளாா். இது, 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க தேவையான முக்கிய கருவியாக இருக்கும் என்றுஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 14 பொதுத் துறை நிறுவனங்களின் மூலதன செலவினம் ரூ.1,11,372 கோடி என நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது இலக்கை தாண்டி ரூ.1,16,323 கோடியாக (104 சதவீதம்) இருந்தது. அதேபோன்று, அந்த நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டின் மூலதன செலவின இலக்கு ரூ.1,15,934 கோடியாக அதிகரிக்கப்பட்டு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,400 கோடி நிலுவை பட்டுவாடா: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.13,400 கோடி நிலுவைத் தொகையை பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த ஐந்து மாதங்களில் வழங்கியுள்ளது. இதில், செப்டம்பரில் மட்டும் ரூ.3,700 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com