தூத்துக்குடி மீளவிட்டான் ஊருக்கு வெளியே முட்புதர்களுக்கு நடுவே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த நபர் தூத்துக்குடியைச் சேர்ந்த கதிரேசன்(வயது 35) என்பது தெரியவந்தது. நேற்றிரவு கதிரேசன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மீளவிட்டான் பகுதியில் மது குடிப்பதற்காக வந்ததாகத் தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் நண்பர்கள் சேர்ந்து கதிரேசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.