அவிநாசி: அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் பாறைக்குழியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெரியாயிபாளையம் பட்டக்காரர் முக்கு பகுதியில் வசித்து வருபவர் சென்னையைச் சேர்ந்த கஸ்தூரி(32). இவரது கணவர் தமிழ்செல்வன்(36). சென்னையில் ஆட்டோ ஓட்டுராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 ஆம் வகுப்பு பயிலும் அகிலேஸ்வரன்(10), 3ஆம் வகுப்பு பயிலும் பாலன்(9) என இரு மகன்கள் உள்ளனர்.
கணவர் சென்னையில் உள்ள நிலையில், பனியன் தொழிலாளியான கஸ்தூரி புதன்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, இரு மகன்களும் வீட்டில் இல்லாததால் விசாரித்ததில் அருகில் உள்ள தனியார் பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றது தெரியவந்தது.
தேடிப் பார்த்த போது, பாறைக்குழி அருகில் இரு மகன்களின் ஆடைகள் மட்டும் இருந்துள்ளது.
அவிநாசி அருகே இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பாறைக்குழி
பிறகு தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி காவல்துறையினர், தீயணைப்புநிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் புதன்கிழமை இரவு இருவரையும் பாறைக்குழியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், அகிலேஸ்வரன் உடல் மட்டும் உயிரிழந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இரவு நேரம் அதிகமானதால் பாலன் உடலை மீட்கும் பணி வியாழக்கிழமை காலை ஒத்திவைக்கப்பட்டது.
பாறைக்குழியில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஏற்கனவே தனியார் பாறைக்குழியில் பல பேர் உயிரிழந்துள்ளதால், உடனடியாக பாறைக்குழியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.