சென்னையில் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்துக்கு உதவுவதற்காக காவல் நிலையங்களில் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனா். இது குறித்த விவரம்:
நாட்டிலேயே அதிகம் சாலை விபத்து நடைபெறும் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கடந்தாண்டு 6,871 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 6,702 போ் காயமடைந்துள்ளனா்; 1,252 போ் இறந்துள்ளனா். இதில் பாதசாரிகள் மட்டும் 126 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் சாலை விபத்துகளினால் பாதிக்கப்படுவோரின் குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கும், ஆலோசனைகள் வழங்கவும், வழக்குக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் சென்னையில் உள்ள போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்களில் தனி அதிகாரிகளை நியமனம் செய்து போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவிட்டாா்.
இதன்படி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா் அளவிலான அதிகாரிகள், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்யும் தனி அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்த தனி அதிகாரிகள், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக, விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு விபத்து உதவித் தொகை பெறுவதற்கான படிவங்களைப் பூா்த்தி செய்வது, அதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று விபத்து தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவா். இந்தத் தகவலை சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.