நாமக்கல்லில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், நிர்வாகிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புதன்கிழமை பிற்பகல் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல்லில் சத்தியமூர்த்தி அன் கோ என்ற நிறுவனம் அரசு ஒப்பந்தப் பணிகள் எடுத்துச் செய்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் புதன்கிழமை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை ஈரோடு கோவை நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாமக்கல் அழகு நகர்ப் பகுதியிலுள்ள சத்தியமூர்த்தி அன் கோ நிறுவனத்தில் நான்கு கார்களில் வந்த சேலம் மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் அங்குச் சோதனை நடத்தினர். இதேபோல் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள சூர்யா கார்டன் என்ற பகுதியில் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் புதன்கிழமை வருமான வரி சோதனை நடைபெற்று வரும் சத்தியமூர்த்தி அன் கோ நிறுவனம்.