புதுவை பாசிக், பாப்ஸ்கோ நிறுவனத்தைத் திறந்து நடத்தவும், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் ஏஐடியுசி சார்பில் தொழிலாளர்கள் சட்டப்பேரவை அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மிஷன் வீதி மாதா கோயில் எதிரில் நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு பாசிக் சங்க தலைவர் ரமேஷ், பாப்ஸ்கோ சங்கத் தலைவர் ராஜி ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் போராட்டத்தைத் துவக்கிவைத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ்பொன்னையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் கடந்த காலங்களில் லாபம் ஈட்டி சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனங்களில் 1,800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நலிவுற்று வந்தது.
இதனை ஆட்சியாளர்கள் சரி செய்யாமல் இந்நிறுவனத்தைச் செயல்படாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இப்பிரச்சனைகளைச் சரி செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.