மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இமானுவேல் சேகரன் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த விழாவின்போது தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைத்து தேங்காய் பழத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் ஏராளமானோர் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து அருகே கொடியேற்றி வைக்கப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இவ் விழாவில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சிவசங்கரி, மானாமதுரை ஒன்றியப் பொறுப்பாளர் ஆனந்த்ராஜ், பொருளாளர் ஜீவானந்தம், நகர்ப் பொறுப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் மானாமதுரை, இளையான்குடி ஒன்றியப் பகுதிகளில் இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.