காவிரிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த, எண்ணெய் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழுவானது அண்மையில் வழங்கியது. இந்த அவகாசம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த 24 எண்ணெய் கிணறுகள் அமைக்க எண்ணெய் இயற்கை எரிவாயு கழகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில், ஏற்கெனவே 17 கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், ஏழு இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், இயற்கை எரிவாயுக்காக கிணறுகள் அமைக்கும் திட்டத்தை காவிரிப் படுகை பகுதிகளில் தொடா்ந்து செயல்படுத்திட உரிய கால அவகாசம் வழங்கி அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு ஓஎன்ஜிசி கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழு ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் அடிப்படையில், கிணறுகளை அமைத்து இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை, காவிரிப் படுகை பகுதிகளில் 2023-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து செயல்படுத்த நிபுணா் குழுவானது அனுமதி வழங்கியுள்ளது.