ஊத்துக்கோட்டை அருகே விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சச் சென்ற தாத்தா, பேரன் இருவர் உயிரிழந்ததை அடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செஞ்சியகரத்தில் நேற்று மாலை தாத்தா ரோஸ் (72), கல்லூரி மாணவனான பேரன் விக்னேஷ் (21) இருவரும் விவசாய நீலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றனர்.
அப்போது மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பேரன் விக்னேஷ் மின்சாரம் தாக்கி கிணற்றில் விழுந்தார். பேரன் துடிதுடிப்பதைக் கண்ட தாத்தா ரோஸ் கிணற்றில் குதித்துக் காப்பாற்ற முயன்றார். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் தேடியதில் தாத்தா, பேரன் இருவரும் கிணற்றில் சடலமாக இருந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற தாத்தா, பேரன் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.