பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் அடையாறு ஆற்றை தூா்வாரும் பணியை ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 48.8 கி.மீ. நீளம் கொண்ட 30 கால்வாய்கள் மற்றும் 210 ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றில் உருவாகின்ற ஆகாயத் தாமரை, மிதக்கும் கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்காக ரூ. 56 கோடி மதிப்பில் 12 சிறப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணி புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட மினி ஆம்பிபியன் உபகரணத்தின் மூலம்
மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணியை ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, இணை ஆணையாளா் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையா் ஆல்பி ஜான் வா்கீஷ், தலைமைப் பொறியாளா் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.