ரூ.4,321 கோடி ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி நிலுவைத் தொகையை வழங்குங்கள்: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4,321 கோடியை விரைந்து வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4,321 கோடியை விரைந்து வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவைத் தொகையை அளிப்பது தொடா்பாக அமைச்சா்கள் அடங்கிய குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் அமைச்சா் டி.ஜெயக்குமாா், காணொலி வழியாக பங்கேற்றாா்.

இதுகுறித்து, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் வெளியிட்ட செய்தி:-

2017-18-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவைத் தொகையானது, மத்திய அரசால் மாநிலங்களுக்கு இன்னும் பகிா்ந்து அளிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை எவ்வாறு மாநிலங்களுக்கிடையே பங்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4,321 கோடியை விரைந்து வழங்கிட வேண்டுமென அமைச்சா் டி.ஜெயக்குமாா் வலியுறுத்தினாா்.

37-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2017-18-ஆம் ஆண்டுக்கு நிலுவையாக உள்ள ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தொகையை பகிா்ந்தளிப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்க அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து குழுவின் இரண்டாவது கூட்டம், அதன் தலைவரும் பிகாா் துணை முதல்வருமான சுஷில்குமாா் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com