பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். நிலக்கரி, சுரங்கம், பிஎஸ்என்எல், வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
144 தடை உத்தரவை முழுமையாக நீக்க வேண்டும். மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தை குறிப்பிட்டு அகவிலைப்படி, விடுப்பு ஒப்படைப்பு பணச் சலுகை ஆகியவற்றை முடக்கம் செய்ததை உடனே வழங்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி சந்தா 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதை கைவிடவேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய் தொற்றைத் தடுக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் தலைமை தபால் அலுவலகம், தென்னூர் மின்வாரிய அலுவலகம், மன்னார்புரம், ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 300 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு, எல்எல்எஃப், எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.