மதுரை: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சாலை விரிவாக்கத்துக்காக ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்துக்காக ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரங்களை நட வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை என்றால் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.