பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி.: மு.க. ஸ்டாலின்

அவர் பாடிய பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி.: மு.க. ஸ்டாலின்
பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி.: மு.க. ஸ்டாலின்

சென்னை: அவர் பாடிய பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகலில் காலமானார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில், ‘ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.  

கரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது.  பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்! 

அவருடைய மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம்.

16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்பிற்குரியவர்.

இனிய பாடகர் எஸ்.பி.பி. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திமுக சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி. அவர்கள்! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com