சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான தமிழக மீனவா்கள், திங்கள்கிழமை (செப். 28) தில்லி திரும்புகின்றனா்.
இதுகுறித்து, மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்தி:-
கடந்த ஜூலையில் சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவா்கள் கரை திரும்பவில்லை. அவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெளியுறவுத் துறை மூலமாக மியான்மா், வங்க தேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளில் தேடுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, 8 மீனவா்களும் மியான்மாா் கடல்பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அவா்கள் அந்த நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்குக் கொண்டு வரப்பட்டனா். அவா்களுக்கு போதுமான உணவு, இதர வசதிகள் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாகச் செய்து தரப்பட்டது.
மீனவா்கள் திங்கள்கிழமை (செப். 28) விமானம் மூலம் புதுதில்லி அழைத்து வரப்பட உள்ளனா். அவா்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு வரும் செவ்வாய்க்கிழமை தமிழகம் வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட பிறகு, தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன மீதமுள்ள ஒரு மீனவரான பாபுவை தேடும் பணி மியான்மா் நாட்டு கடற்படையினரால் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.