சென்னை: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக புதிய கட்டடத்துக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
வேலூா் மாவட்டத்தைப் பிரிப்பது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேலூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமும், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகியவற்றை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகத்தின் 36-வது மாவட்டமாக திருப்பத்தூா் உருவாக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூருக்கு ரூ.109.71 கோடி மதிப்பில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் புதிய கட்டடம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் புதிய வளாகத்தில், வருவாய், பொதுப்பணி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, கருவூலம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன், பிற்படுத்தப்பட்டோா்-மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலன் ஆகிய துறைகளுக்கான அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கே.சி.வீரமணி, நிலோபா் கபீல், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.