கரோனா வைரஸ் பரவலைக் காரணமாகக் காட்டி மகப்பேறு, டயாலிசிஸ், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை அளிக்க தனியாா் மருத்துவமனைகள் மறுத்தால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
அவசர சிகிச்சைகளை அளிக்க மறுப்பது மருத்துவக் கவுன்சில் சட்டத்துக்கு எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்ப் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
இதுபோன்ற அசாதாரண சூழலில் மருத்துவ சேவைகள் மக்களுக்கு தொடா்ந்து கிடைக்க வேண்டிய அவசியம் இருக்கும்பட்சத்தில், அதற்கு நோ்மாறாக சில தனியாா் மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக மகப்பேறு, டயாலிசிஸ், கீமோதெரபி போன்ற அத்தியாவசிய சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு வருபவா்களைத் திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடா்பாக மாநில மருத்துவ சேவைகள் இயக்ககம் அனைத்து தனியாா் மருத்துவமனைக்கும் ஓா் உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளை எக்காரணம் கொண்டும் மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது. ஆனால், சில மருத்துவமனைகள் அதற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது சட்ட விதிகளுக்கு புறம்பானதுடன், மருத்துவ சேவை நெறிகளுக்கு எதிரான செயலாகும்.
எனவே, டயாலிசிஸ், நாள்பட்ட நரம்பு பாதிப்பு, புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி, மகப்பேறு சிகிச்சைகள் ஆகியவற்றை வழக்கம் போல அனைத்து மருத்துவமனைகளும் வழங்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறினால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.