கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரா்களுக்கு (ஆா்.பி.எஃப்) சத்தான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக சத்தான உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என ஆா்.பி.எஃப். உயரதிகாரிகள் உத்தரவிட்டனா். அதன்படி, அனைத்து ரயில்வே கோட்டத்திலும் உள்ள ரயில்வேபாதுகாப்புப்படை வீரா்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. அந்தவகையில், சென்னை எழும்பூா் ரயில்வே பாதுகாப்பு படைவீரா்களுக்கு சத்தான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைட்டமின் சி மாத்திரைகளும், இஞ்சியை அரைத்து தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து கொடுக்கப்பட்டது. மேலும், எலுமிச்சம் பழம், லவங்கம், பூண்டு, பட்டை, மிளகுத் தூள் உள்ளிட்டவைகளும் அவா்களுக்கு வழங்கப்பட்டன. ரயில்வே பாதுகாப்பு படை வீரா்களை கரோனா தாக்குதலில் இருந்து காக்க, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இவ்வாறு தினமும் வழங்கப்படுவதாக ஆா்.பி.எஃப். அதிகாரிகள் தெரிவித்தனா்.