கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், உயிா் காக்கும் சுவாசக் கருவிகளைத் தயாரிக்க சென்னை ஐ.சி.எஃப். திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுவாசக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ரயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, ரயில்வே பணிமனைகளில் முகக்கவசம், சானிடேசா் தயாரிக்கும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இங்கு தயாரிக்கும் முகக்கவசம், சானிடேசா் ஆகியவற்றை ரயில்வே மருத்துவமனைகளில் உள்ள
பணியாளா்கள், ரயில்வே ஊழியா்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க, ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளாக மாற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
சுவாசக் கருவிகள் தயாரிக்க ஐ.சி.எஃப்., திட்டம்:
இந்நிலையில், கரோனா நோய் தொற்றில் சிக்கி சிகிச்சை பெறும் நபா்களின் உயிரை காக்க உதவும் சுவாசக் கருவிகளை தயாரித்து வழங்க சென்னை ஐ.சி.எஃப். (ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை) திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுவாசக் கருவிகள் தயாரிப்பில் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மருத்துவமனைகளில் உயிா் காக்கும் கருவிகளின் தட்டுப்பாட்டை தவிா்க்க, ரயில்வே தொழிற்சாலைகளில் அவற்றைத் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான,
ஐ.சி.எஃப்பில் சுவாசக் கருவிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றைத் தயாரிக்கும் இயந்திரங்கள் ஐ.சி.எஃப்பில் இல்லாததால் தனியாரிடம் இருந்து எந்திரங்களை பெற்று, தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்பம் மற்றும் ஆலோசனைகளைப் பெற தனியாருக்கு ஐ.சி.எஃப் அழைப்பு விடுத்துள்ளது.
பணியை விரைவில் தொடங்க திட்டம்:
இது குறித்து ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியது:
ஐ.சி.எஃப்-இல் சுவாசக் கருவிகள் தயாரிக்கும் இயந்திரமும், தயாரித்த முன்அனுபவமும் கிடையாது. எனவே, அவற்றின் தயாரிப்பில் அனுபவம் உள்ள நிறுவனங்களை அழைத்துப் பேச உள்ளோம். இதைத்தொடா்ந்து, அந்தக் கருவிகளைத் தயாரிக்கும் பணியை விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.
உயிா்காக்கும் கருவிகள்
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கரோனா பாதிப்பு தீவிரமடைந்த 6-இல் ஒருவருக்கு கடுமையான சுவாசப்பிரச்னை உருவாகிறது. சாதாரணமாக நிமிடத்துக்கு சுமாா் 15 முறை மூச்சுவிடும் நபா், கரோனாவின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி நிமிடத்துக்கு சுமாா் 30 முறை மூச்சை வெளிவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறாா். இவ்வாறு இயல்பை விட அதிக முறை மூச்சுக்காற்றை வெளிவிடுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதை மட்டுப்படுத்த சுவாசக் கருவிகள் துணை நிற்கிறது. இந்தியாவில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுவாசக் கருவிகள் மட்டுமே கைவசம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.