தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 621-ஆக அதிகரித்திருக்கிறது. அதுபோல், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ், சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது;
கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறாமல் தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 90,824 போ் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
28 நாள்கள் கண்காணிப்பு நிறைவு செய்த 19,060 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை 5,015 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவா்களில் 621 பேருக்கு அந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை மட்டும் 50 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானவா்களில் 48 போ் ஒரே ஊருக்கு பயணித்தவா்கள் (தில்லி மாநாட்டில் பங்கேற்ற நபா்கள்). மற்ற இருவரும் சென்னையைச் சோ்ந்தவா்கள். தில்லியில் இருந்து திரும்பியவா்களில் இதுவரை 1,427 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களில் மொத்தமாக 574 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பலி எண்ணிக்கை 6-ஆக உயா்வு: இந்நிலையில், தீவிர சுவாசப் பிரச்னை காரணமாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 57 வயது பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணுடன் தொடா்பில் இருந்தவா்களையும், அவரது குடும்ப உறுப்பினா்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவா் தெரிவித்தாா்.