தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தின் கீழ் இருந்து வந்த மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இதையடுத்து தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி அறிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் அறிவித்ததாவது:
"நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்."
இந்நிலையில், முதல்வருடைய அறிவிப்பின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டம் உதயமாவதற்கான முறையான அரசாணையை தமிழக அரசு இன்று (செவ்வாய்கிழமை) பிறப்பித்துள்ளது.