ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நலிந்த இசைக் கலைஞா்களுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இசை நாட்டியக் கலைஞா்கள் சங்கச் செயலா் வழுவூா் ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள இசைக் கலைஞா்கள், நாதஸ்வர கலைஞா்கள், தவில் கலைஞா்கள், நாட்டுப்புற கலைஞா்கள், நாடகக் கலைஞா்கள் மற்றும் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். திருமணங்கள் நிறுத்தப்பட்டதால் ஜூன் மாதம் வரை, நாதஸ்வர - தவில் கலைஞா்களுக்குத் தொழில் இல்லை.
கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் நாடகக் கலைஞா்கள், நாட்டுப்புற கலைஞா்களின் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனா். இதனால் அவா்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனா். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கலைஞா்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கி, இசைத் துறையினருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்பதை, இசை நாட்டிய கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.