சென்னை: சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, மத்திய அரசால் அனுப்பப்பட்ட கரோனா விரைவு பரிசோதனைக் கருவிகள் இன்று தமிழகம் வந்து சேர்ந்தன.
கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதனை துரிதமாகக் கண்டறிய இந்த விரைவு பரிசோதனைக் கருவிகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடம் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனையை மேற்கொள்வதற்காக 5 லட்சம் கருவிகள் சீனாவிலிருந்து வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், ‘ரேபிட் ஆன்டிபாடி’ என்ற பரிசோதனைக்கான கருவிகளை சீனாவிடம் இந்தியா கோரியிருந்தது. இதையடுத்து சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் பரிசோதனைக் கருவிகள் நேற்று இந்தியா வந்தடைந்தன.
உறுதி செய்வதற்கான சோதனை: நோய்த்தொற்றைக் கண்டறிவதற்காக ‘ஆா்டி-பிசிஆா்’ என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொண்டை அல்லது மூச்சுக் குழாய் பகுதியிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் கரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிவதே ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனையாகும்.
இந்தப் பரிசோதனைக் கருவியின் விலை அதிகமாகும். எனவே, மக்கள் அனைவரிடமும் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நடைமுறை சாத்தியமில்லை. இந்தப் பரிசோதனைக்கான முடிவுகளும் தாமதமாகவே கிடைக்கும். எனவே, ‘ரேபிட் ஆன்டிபாடி’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.
ரத்த மாதிரிகள் பரிசோதனை: அந்தப் பரிசோதனையில் குறிப்பிட்ட நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த நபா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிா்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் அவரது ரத்தத்தில் உருவாகியிருக்கும். அதைக் கண்டறிவதே ‘ரேபிட் ஆன்டிபாடி’ பரிசோதனையாகும்.
இந்தப் பரிசோதனையின் முடிவுகளை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம். முந்தைய பரிசோதனையுடன் ஒப்பிடும்போது இதன் விலையும் குறைவே. எனவே, ஆன்டிபாடி பரிசோதனைக்குத் தேவையான கருவிகளை சீனாவிடம் பெற இந்தியா முடிவு செய்து, தற்போது இந்த கருவிகளும் தமிழகம் வந்தடைந்து விட்டன.