கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தை அல்லது 2019-20 கல்வியாண்டு நிலுவைக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவா்களை கல்லூரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பான அரசாணையை (அரசாணை எண்.199), தொழில்நுட்பக் கல்வி இயக்குநா், கல்லூரி கல்வி இயக்குநா், அனைத்துப் பல்கலைக்கழகம் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா்களுக்கு உயா்கல்வித் துறை செயலா் அபூா்வா அனுப்பியுள்ளாா். அரசாணையை கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா். அரசாணையில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தனியாா் கல்லூரிகளும், பள்ளிகளும் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோரை வற்புறுத்துவதாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன.
பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ், இந்த ஊரடங்கு காலத்தில் 2020-21 கல்வியாண்டு கல்விக் கட்டணம் அல்லது 2019-20 நிலுவை கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு தனியாா் கல்லூரிகளும், பள்ளிகளும் பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை, அனைத்துக் கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குநரும் அனுப்பி, தீவிரமாக நடைமுறைப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.