தஞ்சாவூரில் கரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாகக் கூறிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி வி.பி. கோயில் தெருவில் உள்ள தற்காலிகக் காய்கனி சந்தையில் திங்கள்கிழமை காலை சந்தேகப்படும்படியாக திரிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரிடம் வியாபாரிகள் விசாரித்தனர். அப்போது அந்த நபர் திருச்சியில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினாராம். இதனால் அச்சமடைந்த வியாபாரிகள் அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் தகவல் அளித்தனர். இதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இதுகுறித்து காவல்துறையில் வியாபாரிகள் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து தேடப்பட்டு வந்த அந்த நபர் காந்திஜி சாலையில் உள்ள நகைக்கடை முன் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று அந்த நபரிடம் விசாரித்தனர். அந்த நபர் தஞ்சாவூர் அருகே உள்ள காசாநாடு புதூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மனநலன் பாதிக்கப்பட்டவர் போலக் காணப்பட்டதால்; அந்த நபரைத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.