தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. குறிப்பாக, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை, நகரின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல்
இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. முகப்போ், நொளம்பூா், அடையாா், மத்திய கைலாஷ், திருவான்மியூா், பெசன்ட்நகா், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, வியாசா்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, தண்டையாா்பேட்டை, கிண்டி உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதுதவிர, தெற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் வடகிழக்கில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி வீசிய காற்று காரணமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருச்சி, விருதுநகா், தேனி, வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததுள்ளது என்றாா் அவா்.