பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் முறையை கைவிட வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
காரோனா பொதுமுடக்கத்தையொட்டி தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன், “தமிழக அரசு பொதுமுடக்கத்தில் எத்தனை தளர்வுகள் அறிவித்தாலும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதால் தொழில்துறை இயங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுமே இ-பாஸ் பெற்று பயணிப்பது என்பது இயலாத ஒரு காரியம்.
படித்த விழிப்புணர்வு உள்ளவர்களுக்கே இ-பாஸ் முறை மிகவும் சிரமமானதாக இருக்கிறது. படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் படிப்பு அறிவில்லாத சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்களை செய்பவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை மற்ற மாவட்டங்களில் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு அனுப்ப முடியவில்லை.
இதனால் தொழில் நிறுவனங்களை தொடர்ச்சியாக நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கின்றனர். தினமும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இ-பாஸ் முறையினால் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
அதேபோல ஊரடங்கினால் சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களை நிறுவனங்கள் அழைத்தும் பணிக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். எனவே இ-பாஸ் முறையை கைவிட்டால் மட்டுமே அனைத்து தொழில்களும் வேகமெடுக்கும். இதுவே இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். பல தளர்வுகள் கொடுத்திருந்தாலும் இ-பாஸ் முறையில் மக்களுக்கு உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அந்த முறையை அரசு கை விட வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.