ஈரோடு மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை எளிமையாகக் கொண்டாட்டம்
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை ஈரோடு மாவட்டத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈரோடு மாவட்டத்தில் 200 மசூதிகள், 32 ஈத்கா மைதானங்களில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஈத்கா மைதானங்கள் ஏதும் அமைக்கப்பட வில்லை. மசூதிகளும் திறக்கப்படவில்லை.
இதன்காரணமாக முஸ்லிம்கள் அவர்களது வீடுகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகை செய்து, புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ந்தனர். பக்ரீத் பண்டிகையன்று குருபானி பொது இடங்களில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், வதை கூடங்களில் மட்டுமே ஆடுகளை வெட்டி, பிரித்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், ஊரகப்பகுதிகளில் மசூதிகளில் தொழுகை நடத்திக்கொள்ள அனுமதி உள்ளதால், அங்கு பொதுமக்களான இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மாறாக மசூதி நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் மட்டுமே தொழுகை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அங்கும், சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுகின்றனரா? என போலீசார் கண்காணித்தனர்.