சென்னை: சென்னையில் மற்ற மண்டலங்களில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வரும் நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1013 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையிலேயே கரோனா பாதிப்பு அதிகபட்சமாக இருந்த கோடம்பாக்கத்தில் நேற்று 1,613 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அது 1606 ஆகக் குறைந்து வருகிறது. அதே சமயம் அம்பத்தூரில் நேற்று 1266 பேர் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 1,307 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 99 ஆயிரமாக இருக்கும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரத்தை நெருங்குகிறது. தற்போது ஒட்டுமொத்தமாக 12,765 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2113 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னையிலேயே ஆரம்பத்தில் கரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வந்த ராயப்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் கரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.