தேனி மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு, அம்மன் தபசு திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, கோயில் வாசல்களில் பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு, அம்மன் தபசு திருநாளை முன்னிட்டு அம்மன் கோயில்கள் மற்றும் குல தெய்வம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில், உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் முல்லைப் பெரியாற்றங்கரையில் பெண்கள் தாலிப் பெருக்கி கட்டி வழிபடுவர். விவசாயிகள் நிலத்தை பண்படுத்தி விதைப்பு பணியைத் தொடங்குவர்.
இந்த ஆண்டு கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முன்னிட்டு கோயில்கள் திறக்கப்படவில்லை. மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்க கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், அதிகாலை முதல் பக்தர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் அம்மன் கோயில் மற்றும் குல தெய்வம் கோயில்களுக்குச் சென்று வருகின்றனர். இதனால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் வாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்று படித்துறைகள் வேலி அமைத்து மூடப்பட்டிருந்தன. விவசாயிகள் தங்களது நிலங்களுக்குச் சென்று வருண பகவானை வழிபட்டு உழவு மற்றும் விதைப்பு பணியைத் தொடங்கினர்.