புதுச்சேரியில் இன்று புதிதாக 178 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,982 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவல்:
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை 782 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 125 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், ஏனாமில் 42 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 37 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 22 பேர் ஜிப்மரிலும், 66 பேர் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 9 பேர் காரைக்காலிலும், 42 பேர் ஏனாமிலும், 2 பேர் மாஹேவிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,982 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சோலை நகரைச் சேர்ந்த 71 வயது ஆண், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 55 வயது ஆண், பெண், குறிச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஆகிய நால்வரும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,411 ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.