திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட இறுதிசெமஸ்டர் தேர்வு நடைபெறுமெனப் பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று வைரஸ் காரணமாக, நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புப் படித்திடவும், வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம் செய்வதற்கும் வசதியாக இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அவர்களது அகமதிப்பீடு, வருகைப்பதிவேடு, முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஜூன் 22ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதனை மாணவர்களும், பெற்றோர்களும் வரவேற்றிருந்த நிலையில், திங்கள்கிழமை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இறுதியாண்டு மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின்படி இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயமாக நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 22ஆம் தேதி மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அந்த உத்தரவுத் திரும்பப் பெறப்பட்டு, இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எந்தவிதத்தில், எப்போது நடைபெறும் என்பதைத் தொடர்புடையத் துறைத் தலைவர்கள் அறிவிப்பார்கள்.
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, இறுதி செமஸ்டர் படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள், அசாதாரண நிலை முடிவுக்கு வந்தபின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.