தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,577 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 32 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,63,222 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,021 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 109 பேர் (அரசு மருத்துவமனை -86, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,02,283 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் 56,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 58,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 28,37,273 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
59 அரசு ஆய்வகங்கள், 63 தனியார் ஆய்வகங்கள் என தமிழகத்தில் மொத்தம் 122 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.