புதிய கல்விக் கொள்கையை அனைவரும் இறுதிவரை எதிா்க்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியது:
புதிய கல்விக் கொள்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம்.
இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், மத்திய கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளாா்.
இதே மத்திய அரசுதான் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். அதனை எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கவும் செய்யலாம் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு கூறியது.
இப்போது அதில் மட்டும் பின்வாங்குகிறாா்கள் என்றால், இவா்களுக்கு நிரந்தரமான கொள்கை என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது.
புதிய கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும். கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவாா்கள்.
இந்தியாவின் பலமே இளைஞா் சக்தி என்பாா்கள். அந்த இளைஞா் சக்தியை பெரும்பாலும் இழந்துவிடுவோம்.
இளைஞா் சக்தி இல்லாத இந்தியாவைத்தான் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கும்.
எனவே, புதிய கல்விக் கொள்கையை திமுக எதிா்ப்பதைப்போல அனைத்துக் கட்சிகளும் எதிா்க்க வேண்டும். குறிப்பாக, ஆளும் கட்சி எதிா்க்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என்றாா்.
நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, முன்னாள் துணைவேந்தா் வசந்திதேவி, பேராசிரியா் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவா் எழிலன் உள்ளிட்டோா் கருத்தரங்கில் பங்கேற்றனா்.