கரோனா தொற்றால் 44 மருத்துவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 77.80% ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகமாக கரோனா பரிசோதனை மையங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். இதுவரை 28,92,395 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா தொற்றால் 44 மருத்துவர்கள் உயிரிழந்ததாக ட்வீட் செய்துள்ளார். இது மிகவும் தவறான தகவல். இந்திய மருத்துவச் சங்கம் இந்த தகவலை மறுத்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற தகவல்கள் அவர்களது மன உறுதியை குலைப்பதாக உள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பாதீர்கள். அவ்வாறு பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.