சென்னை: தமிழகத்தில் இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்களின் ரத்தை ஆகஸ்ட் 15 -ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களில் தொடக்கத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால், சென்னையைத் தவிர்த்து பிற முக்கிய நகரங்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, முதல்கட்டமாக, கோவை -மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்) , மதுரை விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகர்கோவில் விரைவு ரயில் (தினசரி), கோயம்புத்தூர்-காட்பாடி(தினசரி) ஆகிய 4 வழித்தடங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக, திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூர், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தடங்களில் 3 சிறப்பு ரயில்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டன.
இதற்கிடையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியதையடுத்து, இந்த ரயில்களின் சேவை ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம்தேதி வரை ரத்து செய்யப்பட்டன, இதைத் தொடர்ந்து, இந்த ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த ஏழு சிறப்பு ரயில்களின் ரத்து மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த ரயில்கள் ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது:
இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு முழு பணம் திரும்ப வழங்கப்படும். இணையதளம் மூலம் பயணச்சீட்டு பெற்றவர்களுக்கு தானாகவே அவர்களின் வங்கிக்கணக்குக்கு பணம் திரும்பக் கிடைத்துவிடும். கவுன்ட்டர் மூலமாக பயணச்சீட்டு பெற்றவர்கள் ரயில் பயணத் தேதியில் இருந்து 6 மாதம் வரை பயணத்துக்கான முழுதொகையை பெற கால அவகாசம் உள்ளது. எனவே, அவர்கள் கவுன்ட்டர் மூலமாக முழு பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதேநேரத்தில், சென்னை-தில்லி இடையே இயக்கப்படும் ராஜதானி சிறப்பு ரயில் அட்டவணைப்படி வழக்கம் போல இயக்கப்படும் என்றார் அவர்.