புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று(ஆகஸ்ட் 5) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மற்றும் மகன்கள் இருவர், மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அமைச்சர், அவரது மகன் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலின் தீவிரத்தால், முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல் உள்ளிட்ட களப்பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலருக்கும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.