தமிழகத்தில் மேலும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோன்று களப்பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ்-க்கு இன்று உறுதியான நிலையில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, தற்போது நடிகரும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ்-க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திண்டுக்கல் ரயில் நிலையம் அடுத்துள்ள இந்திரா நகரிலுள்ள தனது இல்லத்திற்கு வியாழக்கிழமை வந்துள்ளார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முன்னதாக, அவரது பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.