தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,880 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,880 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,856. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 24 பேர்.
அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் மட்டும் 984 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் 119 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 78 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,690 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மேலும் 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,27,575 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 52,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 67,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 30,88,066 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேதியில் தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 65 என மொத்தம் 126 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.