சென்னையில் அவலம்: சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடற்றோர்

சென்னை எழும்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த வீடற்றோர்களைத் தனிமைப்படுத்துவதற்காக சாலைகளில் ஓரத்திலேயே தரகத்தால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படு
எழும்பூர் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகம் அருகே சாலையில் வசிப்போருக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்.
எழும்பூர் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகம் அருகே சாலையில் வசிப்போருக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்.


சென்னை: சென்னை எழும்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த வீடற்றோர்களைத் தனிமைப்படுத்துவதற்காக சாலைகளில் ஓரத்திலேயே தரகத்தால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் வசிக்கும் வீடற்றோரைக் கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் தங்கியுள்ள வீடற்றோரில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக அச்சாலையிலேயே தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டதுடன், இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சியால் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து காந்தி இர்வின் சாலையில் வசிக்கும் வீடற்றோர் கூறுகையில், "இந்தச் சாலையில் 45 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுடன் இருந்த 10 பேருக்கு அண்மையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை சிகிச்சை முகாமுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக எங்களை தனிமைப்படுத்தும் வகையில், இந்தச் சாலையின் ஓரத்தில் தகரத்தால் தடுப்பு அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என எச்சரிக்கை ஸ்டிக்கரையும் மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினர். தங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற பயத்திலும்,  மழைக்காலத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள சாலையில் உறங்க முடியாத காரணத்தாலும் பெரும்பாலானோர் இங்கிருந்து சென்று விட்டனர்' என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "நோய்த் தொற்றுக்குள்ளாகும் வீடற்றோரை முறையாக தனிமைப்படுத்தாத காரணத்தால் பொதுக் கழிப்பிடம் அல்லது ரயில்வே தண்டவாளத்தைத் தான் காலைக்கடனை கழிக்க பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரத்தில் வசிக்கும் அனைத்து வீடற்றோரையும் முகாம்களில் தங்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சாலையோரத்தில் வசிக்கும் வீடற்றோருக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட வீடற்றோர்கள் உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமை முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com