தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கரோனா: மேலும் 118 பேர் பலி
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,834 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,814, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 20 பேர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 5-வது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக 986 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 118 பேர் (அரசு மருத்துவமனை -71, தனியார் மருத்துவமனை -47) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,50,680 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 52,810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 67,492 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 33,60,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 61, தனியார் ஆய்வகங்கள் 70 என மொத்தம் 131 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.