தமிழகத்தில், பொது முடக்கத்தை மீறியவா்களிடமிருந்து ரூ.21 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான பொது முடக்கத்தை, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு, தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 776 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 80 ஆயிரத்து 398 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 87 ஆயிரத்து 221 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.21 கோடி 3 ஆயிரத்து 93 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், புதன்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை, பொது முடக்கத்தை மீறியதாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.