மத்திய ஆயுஷ் அமைச்சக செயலளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா செயலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாநில அரசுத்துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாள்கள் இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர். இம்முகாமில் தொடக்கத்திலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆங்கிலத்தில் நடத்தும்படி தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு இணையவழியில் தகவல் அனுப்பினர். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாறாக, இந்தி புரியாதவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறலாம் என்று அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா கூறியுள்ளார். இது பெரும சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை.
அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.