தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து: பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து: பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கரோனா பரவல் விகிதத்திற்கேற்பவும், பொருளாதார இழப்பை ஈடுசெய்யவும் அவ்வபோது தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுவந்தது.

அந்தவகையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை  மீண்டும் பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்கும்வசதியுடன் கூடிய கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு, நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்க தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் போன்றவை 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்.

பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறன் மற்றும் தொழில்பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் அதன்சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது
இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு
முழுமையாக கடைபிடிக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி
நிறுவனங்களுக்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கலாம்

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு முன்பு இருந்த தடைகள் தொடரும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை தொடரும்.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com