சென்னை: திருமண மண்டபங்களுக்கு, சொத்துவரி போன்ற இதர வரிகளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்களிக்க வேண்டும் என அனைத்து கல்யாண மண்டப உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருமண மண்டபத்தின் அளவுக்கேற்ப 50 சதவீதமானோரை அனுமதிக்கக் கோரி, பல முறை அரசிடம் மனு அளித்தும் பயனில்லை. அடுத்த நான்கு மாதங்களில் 17 முகூா்த்த நாள்கள் உள்ளன. இந்நிலையில் திருமண மண்டபங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்காமல், இதனைச் சாா்ந்த 15 லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் குறித்து ஆலோசிக்க வேண்டி, அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:
கடந்த மாா்ச் முதல் வருகிற டிசம்பா் வரை, ஒவ்வொரு மண்டப உரிமையாளா்களுக்கும், மாதம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மின்சார கட்டணத்தில் இருந்து விலக்களிப்பதோடு, மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை செலுத்திய கட்டணத்தை, எதிா்வரும் காலங்களில் சரி கட்டல் செய்ய வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் செலுத்திய பல்வேறு வகையான உரிமங்களுக்கான கட்டணங்களையும், அடுத்த ஆண்டுக்கான தொகையாக மாற்றித் தர வேண்டும். மண்டபத்தின் ஊழியா்களுக்கு, கரோனா நிவாரணம் மற்றும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும். சொத்து வரி, தண்ணீா் வரி, மாசுக் கட்டுப்பாட்டு கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளிலிருந்தும் 3 ஆண்டுகளுக்கு விலக்களிக்க வேண்டும் என மண்டப உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.