நாகர்கோவில்/கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவருமான எச்.வசந்தகுமார் உடல், அவரது சொந்த ஊரான அகஸ்தீசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமார், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்திலும், காமராஜர் அரங்கத்திலும் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான அகஸ்தீசுவரத்துக்கு சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
அகஸ்தீசுவரத்தில் உள்ள இல்லம் முன்பு இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டிருந்தது. வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி, மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார், மகள் தங்கமலர் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, நாகர்கோவில் வருவாய்க் கோட்டாட்சியர் அ.மயில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், எம்.எல்.ஏ.க்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார், அனிதா ராதாகிருஷ்ணன், பூங்கோதை, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், ஜோதிமணி எம்.பி., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ், குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது பெற்றோர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.