கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட என்எஸ் நகர் பகுதியில் மழை வெள்ளம் குடியிருப்புகளில் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
அவ்வாறே கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் நேமள்ளூர் ஊராட்சி என்எஸ் நகர் பகுதியில் மழை வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு மழை வெள்ளம் இருந்தது.
இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .தொடர்ந்து கிராம உதவியாளர் சண்முகம் சம்பவ இடம் விரைந்து அப்பகுதி மக்களோடு இணைந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியால் என்.எஸ். நகர் பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் கால்வாய்கள் வெட்டி மழை வெள்ளத்தை வெளியேற செய்தார். தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்ற கால்வாய்களை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மழை வெள்ளம் சிறிது சிறிதாக வெளியேறினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நேமல்லூர் என்எஸ் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.