தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி பேசினார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் வரும் 3-ஆம் தேதி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யவுள்ளதாகவும், ஆதரவாளர்கள் விரும்பினால் புதியக் கட்சி தொடங்கப்படும் எனவும் கூறினார்.
திமுக கட்சியில் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறு எந்த அழைப்பும் வரவில்லை என்றும், திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் குறித்து நடிகர் ரஜினிகாந்தை கட்டாயம் சந்தித்து பேசவுள்ளதாகவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.