சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே அருள்வாடியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி யானையைக் கொன்ற வழக்கில் தலைமறைவான தோட்டத்து உரிமையாளர் காளையாவை இன்று வனத்துறையினர் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வந்தன. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட யானைகள் காட்டுக்குள் துரத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி வனத்திலிருந்து வெளியேறிய 20 வயதுள்ள ஆண்யானை அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த காளையா 45, தனது தோட்டத்தில் ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். வனவிலங்குகள் பயிரைச் சேதப்படுத்துவதால் பயிர்களைப் பாதுகாக்க மின்கம்பத்திலிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து தோட்டத்து வேலியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்.
அங்கு வந்த யானை ராகி தோட்டத்துக்குள் புகும்போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் பாய்ச்சி யானையைக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த காளையாவை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் பதுங்கியிருந்த காளையாவை 4 நாள்களுக்கு பிறகு ஜீரஹள்ளி வனத்துறையினர் இன்று கைது செய்து ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.